தென்னகத்தின் ஜான்சிராணி., யார் இந்த அஞ்சலையம்மாள் முருக படையாட்சி.?!
anjalaiyammal muruka padaiyatchi
1890 ஆம் ஆண்டு கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் ஒரு எளிய வீட்டில் பிறந்தவர் அஞ்சலையம்மாள். திண்ணை பள்ளியில் 5 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். தனது 31ஆம் வயதில் 1921 ஆம் ஆண்டு விடுதலைப்போராட்டத்தில் இறங்கிய அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள்.
இவரது கணவர் முருக படையாட்சி, பத்திரிகை ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். அது சுதந்திர போராட்ட காலத்தின் உச்சகட்டம். நாட்டு நடப்புகளை தனது கணவர் மூலம் அறிந்துகொண்ட அஞ்சலையம்மாள் அன்னியரின் அடக்கு முறையை கண்டு வெகுண்டு எழுந்தார்.
அதுநாள் வரையிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த அவர் நாட்டின் விடுதலைக்காக வீதிக்கு இறங்கி வந்து போராட்டங்களில் ஈடுபட்டார். எளிய தோற்றத்துடன் காணப்பட்ட இவர் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை கண்டு மனம் அஞ்சாமல் தன் பேச்சால் பெண்களிடமும் நாட்டு பற்றை உருவாக்கினார்.

1921-ம் ஆண்டு நடந்த இந்திய விடுதலை போராட்டத்தில் #தென்நாட்டில் இருந்து முதல் பெண்மணியாக கலந்துகொண்டார் தென்னாற்காட்டின் வீர மங்கை. இதன் மூலம் அவரது வீடு விடுதலை போராட்ட வீரர்கள் சந்திக்கும் இடமாக விளங்கியது.
கடலூர் வழியாக செல்லும் தலைவர்கள் அஞ்சலையம்மாளின் வீட்டில் தங்கி உணவு உண்டு செல்ல தவறியது இல்லை. 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிவிட்டு கடலூர் வழியாக கும்பகோணம் நோக்கி சென்றார்.
இதையறிந்த அஞ்சலையம்மாள் காந்தியடிகளை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். காந்தியடிகளை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தடையை மீறி காந்தியடிகளை குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று உணவளித்தார் அஞ்சலையம்மாள்.
இதை அறிந்த ஆங்கிலேயர்கள் கர்ப்பிணியாக இருந்த அவரை ஓராண்டு சிறையில் அடைத்தனர். பிரசவ நேரத்தின் போது பரோலில் விடுவிக்கப்பட்ட அவர் 3 மாத கைக்குழந்தையுடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மதுவிலக்கு கோரி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். கள்ளுக்கடை இருக்கும் இடங்களில் எல்லாம் துண்டு பிரசுரம் கொடுத்து மறியல் செய்து கைதாவது இவரது இயல்பானது. சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கு பெண்கள் படையுடன் ஊர்வலமாய் சென்று சாதனை படைத்தார்.
1927-ம் ஆண்டு மக்களை கொன்று குவித்த ஆங்கிலேய படைத்தளபதி நீல் என்பவனுக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை அகற்றும் போராட்டத்தை அம்மையார் முன்னின்று நடத்தியதோடு கையில் வைத் திருந்த கோடாரியால் சிலையை வெட்டி உடைக்க முயன்றார்.
அப்போது ஆங்கிலேயர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். அவருக்கும், அவரது கணவர் முருகப்பாவுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது குழந்தைகள் சிறுவர் சீர் திருத்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் 1931-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்த அஞ்சலையம்மாள் தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப்போராட்டம், சட்டமறுப்பு இயக்க போராட்டம், தனிநபர் சத்தியாகிரகப்போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றார். சத்தியாகிரகப் போராட்டத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சிறைவாசத்தின் போது கர்ப்பிணியாக இருந்த அவருக்கு சிறையிலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஜெயில் வீரன்’ என பெயரிட்டார். சுதந்திரம் ஒன்றே தனது குறிக்கோள், அதை அடையாமல் சாகமாட்டேன் என்று கூறிய அஞ்சலையம்மாள் நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடினார்.
இதன் பிறகும் பல குடும்பங்கள் மதுவால் சீரழிந்ததை கண்டு மன வேதனை அடைந்த அவர் மது விலக்குக்காக போராடினார். தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்து போராடிய அஞ்சலையம்மாள் 20-2-1961-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது நினைவாக கடலூர் முதுநகரில் உள்ள பூங்காவில் நினைவு தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழக அரசு சிங்கப்பெண் அஞ்சலையம்மாள் முருக படையாட்சிக்கு கடலூரில் சிலை வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
anjalaiyammal muruka padaiyatchi