'நெசவாளர்களின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி'...! - வாழ்வாதாரத்தை மீட்க நயினார் நாகேந்திரன் அதிரடி வாக்குறுதி...!
An end to the tears of weavers Nayinar Nagendran promises action restore livelihoods
நூல் இழைகளில் நமது மண்ணின் வரலாற்றையும், நெசவின் ஒவ்வொரு நுணுக்கத்திலும் பண்பாட்டின் பெருமையையும் பதித்து வரும் கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் தேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெசவாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தலைமுறை தலைமுறையாக நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும், பழமையான கைவினை நுட்பங்களையும் தங்களது உழைப்பால் உயிர்ப்புடன் பாதுகாத்து வரும் கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் தேசிய கைத்தறி தினத்தின் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கைத்தறி ஆடை உருவாகும் ஒவ்வொரு தருணத்திற்குப் பின்னாலும் நெசவாளரின் கடின உழைப்பு, பொறுமை, கைவினைத் திறமை ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன. அவர்கள் உருவாக்கும் ஆடைகள் நமது உடலை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், நமது மண்ணின் தனித்துவத்தையும், கலாச்சாரத்தின் செழுமையையும் உலக அரங்கில் பறைசாற்றுகின்றன.
கைத்தறிப் பொருட்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி நெசவாளர்களின் உழைப்புக்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு துணை நிற்பதன் மூலம், நமது பாரம்பரிய நெசவுக் கலையையும் பாதுகாக்க முடியும்.நமது தொன்மையான கைத்தறி மரபை மதிப்போம்; நெசவாளர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
தலைமுறைகள் கடந்து வந்த இந்தப் பண்பாட்டுச் செல்வத்தை அடுத்த தலைமுறையினரிடமும் பெருமையுடன் கொண்டு சேர்ப்போம்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
An end to the tears of weavers Nayinar Nagendran promises action restore livelihoods