இனியும் "தேசியவாத காங்கிரஸ் கட்சி" பெயரில் தான் போட்டி.! - அஜித் பவார் திட்டவட்டம்.!!
Ajith Pawar said that they will contest the elections in name of NCP
மகாராஷ்டிரா அரசின் எதிர்க்கட்சியாக இருக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 29 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அஜித் பவார் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவி ஏற்று கொண்டார். மேலும் 9 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அஜித் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "முன்னதாக நாகாலாந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். அவர்கள் அனைவரும் கட்சியின் முடிவின் அடிப்படையில் பாஜகவுடன் சென்றனர்.
அதே போன்று தான் தற்பொழுது மகாராஷ்டிராவிலும் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காகவே இத்தகைய முடிவை எடுத்துள்ளோம். இதை பலர் குறை சொல்வார்கள். அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம். எங்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் திருப்தி அடைந்துள்ளனர். எங்களில் சிலர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு தான் இத்தகைய முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம்.
தற்போது இருக்கும் மகாராஷ்டிரா அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில்தான் போட்டியிடுவோம். அமைச்சர்களின் இலாகாக்கள் ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும். தேசிய நலனையும் மாநில நலனையும் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித் பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Ajith Pawar said that they will contest the elections in name of NCP