அதிமுகவினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி!
AIADMK GS Edapadi K Palanisami Announce 21042023
பூர்த்தி செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும்; புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் கடந்த 5.4.2023 முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கழகத்தில் உறுப்பினர் சேர்ப்பது சம்பந்தமாக மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அனைத்து விபரங்களும் தெளிவாக பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களில், மாவட்டக் கழகச் செயலாளரின் சீல்; சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்களின் சீலுடன் கூடிய கையொப்பம்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்களின் சீலுடன் கூடிய கையொப்பத்துடன், தமிழ் நாட்டில் 1 உறுப்பினர் சீட்டிற்கு 10 ரூபாய் வீதமும்; பிற மாநிலங்களில் 1 உறுப்பினர் சீட்டிற்கு 5 ரூபாய் வீதமும் கணக்கிட்டு, வருகின்ற 4.5.2023 வியாழக் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து, அதற்கான ரசீகளை பெற்றுக்கொள்ளலாம்.
அதன் பின்னர், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தயார் செய்யப்பட்டு அவை வழங்குவது சம்பந்தமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK GS Edapadi K Palanisami Announce 21042023