அதிமுக கதவு மூடல்: குழம்பி நிற்கும் ஓபிஎஸ்..திமுக அல்லது தவெக—விரைவில் முடிவெடுக்க ஓபிஎஸ்ஸை நெருக்கும் ஆதரவாளர்கள்!
AIADMK door closed OPS is confused DMK or Teva Supporters pressuring OPS to make a decision soon
திமுக அல்லது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆகிய இரு முடிவுகளில் ஒன்றை விரைவில் எடுக்குமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை (ஓபிஎஸ்) அவரது ஆதரவாளர்கள் நெருக்கி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் கதவுகள் முற்றாக அடைக்கப்பட்டுவிட்ட சூழலில், சமூக விசுவாசிகளின் ஆதரவை இழப்பதற்கு முன் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிமுக–பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்த பின்னர், ஓபிஎஸ்ஸும் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே தேனி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், “அதிமுக ஒன்றிணைய நான் தயாராக இருக்கிறேன்; எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் அதிமுகவில் மீண்டும் ஒற்றுமை ஏற்படுமா என்ற விவாதம் தீவிரமடைந்தது.
ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பொதுக்குழு உறுப்பினர்கள் 2,500 பேர் இணைந்து ஓபிஎஸ்ஸை நீக்கிய முடிவை எடுத்துள்ளனர். அதனால் அவரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ஓபிஎஸ் மட்டுமல்லாமல், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்க்கக் கூடாது என்பதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில அதிமுக நிர்வாகிகள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டசபைத் தேர்தல் காலகட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளடி வேலைகள் செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுக வலுவிழந்ததாகவும், ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் அந்தப் பகுதிகளில் அதிமுக மீண்டும் வளரத் தொடங்கியுள்ளதாகவும் எடப்பாடி தரப்பு கூறுகிறது. இப்போது ஓபிஎஸ் மீண்டும் வந்தால், தற்போதுள்ள நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகிவிடுவார்கள் என்ற அச்சமும் அதிமுக தரப்பில் உள்ளது.
மற்றொரு புறம், ஓபிஎஸ் ஆதரவாளர்களே அவரை முடிவெடுக்க நெருக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், சுப்புரத்தினம், குப கிருஷ்ணன், தர்மர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி விட்டனர். தற்போது வெல்லமண்டி நடராஜன் மற்றும் உசிலம்பட்டி ஐயப்பன் ஆகிய இருவரே ஓபிஎஸ்ஸுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களும் கூட, “வேறு முடிவு எடுப்பதற்கு முன் தலைமை ஒரு தெளிவான தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழலில், ஓபிஎஸ் தரப்பில் மாவட்ட வாரியாக ஆதரவாளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், “அதிமுக கதவு முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில், திமுக அல்லது தவெக என்ற இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன” என்ற முடிவுக்கு பலர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அமைச்சர் பதவி உள்ளிட்ட அரசியல் வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றும், ஆதரவாளர்கள் எம்எல்ஏக்களாகும் சாத்தியம் இருப்பதாகவும் கணக்கிடப்படுகிறது. அதே நேரத்தில், தவெக பக்கம் சென்றால் உடனடியாக பதவிக்கு வருவது கடினம் என்ற மதிப்பீடும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால், காலம் தாழ்த்தாமல் ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தம் ஓபிஎஸ்ஸின் மீது அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திமுகவா, தவெகவா என்ற தேர்வில் ஓபிஎஸ் எடுக்கும் முடிவு, அவரது அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், அவருடன் மீதமுள்ள விசுவாசிகளின் நிலையும் தீர்மானிக்கும் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK door closed OPS is confused DMK or Teva Supporters pressuring OPS to make a decision soon