கரூரை மொத்தமாக முடக்க போகும் அதிமுக... எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
admk protest in karur eps announce
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ளார் அறிவிப்பில், "கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும்; மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! 22.2.2026 - ஞாயிற்றுக் கிழமை நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான 57 மாதகால விடியா திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தப்பட்டதோடு, பல்வேறு வரிச் சுமைகளாலும் மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், திமுக-வினர் சுயலாபம் கருதி, ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றர்.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவது சம்பந்தமாக, மாவட்டக் கழகத்தின் சார்பில், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திடம், தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், மணல் கொள்ளையை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் துறை பொய் வழக்கு போடும் அவலம் நிகழ்வது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
விடியா திமுக அரசின் இத்தகைய அராஜக போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அநியாயங்களுக்கெல்லாம் விடிவு காலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமலும், இச்செயலை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போடும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும்; கரூர் மாவட்ட நிர்வாகத்தையும், மாவட்ட காவல் துறையையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கரூர் மாவட்டத்தின் சார்பில் 22.2.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், 'மண்மங்கலம் தாலுகா, வாங்கல் கடை வீதி' என்ற இடத்தில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. M.R. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
admk protest in karur eps announce