இப்படி பண்ணியிருக்கீங்களே கோ'பால்'.. ஆவடி நாசரை கலாய்த்த ஜெயக்குமார்..!!
ADMK Jayakumar has criticized dmk mla Avadi Nasar
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜாவின் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை 10:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த பதவி பறிப்பு நடந்துள்ளது. மேலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 2 முறை திமுக அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையிலும் யாருடைய பதவி பறிக்கப்படவில்லை. ஆனால் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெருமையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 30 ஆண்டு காலம் நெருக்கமாக இருந்த ஆவடி நாசர் பெற்றுள்ளார்.
ஆவடி நாசர் மேயர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை வழங்கி அழகுபார்த்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின். நாசர் கோபப்படுகிறார், தொண்டர்களை மதிப்பது கிடையாது என அவர் மீது பல புகார்கள் எழுந்தபோதும் அதை முதல்வர் மு.க ஸ்டாலின் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தனக்கு கீழ் இருக்கும் நிர்வாகியை கல்லை கொண்டு நாசர் தாக்கியதுதான் முதல்வர் ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அமைச்சர் நாசரின் பதவி பறிக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவடி நாசரின் பால்வளத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இப்படி பண்ணியிருக்கீங்களே கோ'பால்' என ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
ADMK Jayakumar has criticized dmk mla Avadi Nasar