தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
ADMK EPS Extends Heartfelt Wishes to the Incoming Government
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
17-வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத ஒரு 'தொங்கு சட்டமன்ற' சூழல் நிலவி வருகிறது. இந்த இக்கட்டான தருணத்தில், எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தி ஒரு முதிர்ச்சியான அரசியல் நகர்வாகக் கருதப்படுகிறது.
தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், "நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு 116 என்ற பலத்துடன் ஆட்சிக் கட்டிலை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த வாழ்த்து மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அ.தி.மு.க. தனது எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கவும், அடுத்தகட்ட வியூகங்களை வகுக்கவும் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைத்திருந்தது. இன்று காலைதான் அவர்கள் அனைவரும் சென்னை திரும்பி, எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சூழலில், அவர் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பது, அ.தி.மு.க. ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறதா அல்லது இது புயலுக்கு முன்னால் நிலவும் அமைதியா என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.
குறிப்பாக, த.வெ.க. தரப்பில் குதிரை பேரப் புகார்கள் மற்றும் ஏஐ வீடியோ சர்ச்சைகள் நிலவி வரும் வேளையில், எடப்பாடி பழனிசாமி எந்தக் கட்சியையும் நேரடியாகக் குறிப்பிடாமல், "ஆட்சி அமைக்கும் கட்சி" எனப் பொதுவாக வாழ்த்தியிருப்பது அவரது ராஜதந்திரத்தைக் காட்டுகிறது.
இது ஒருபுறமிருக்க, மகாபலிபுரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ-க்கள் முகாமிட்டுள்ளதும், மாலை 4 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுக்கப்போகும் முடிவும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கவுள்ளன. இத்தகையப் பரபரப்பான சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நாகரிகமான அரசியல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
ADMK EPS Extends Heartfelt Wishes to the Incoming Government