பொங்கலுக்குப் பிறகு திருப்புமுனை – விஜய்-க்கு ஓகே சிக்னல் கொடுத்த ஓபிஎஸ்! செங்கோட்டையன் பகிர்ந்த ஹேப்பி நியூஸ்!
A turning point after Pongal OPS gives the OK signal to Vijay Happy news shared by Sengottaiyan
தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், பொங்கல் முடிந்ததும் தமிழக அரசியலில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் மிக விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் கரட்டூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் வேலு நாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து, அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமையில் 50 பேர், செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “எதிர்கால தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது உருவான சூழல் இன்றும் தமிழகத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. புதிய வரலாற்றை படைப்பதற்கு ஒரு புதிய தலைவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மனதிலும், குறிப்பாக இளைஞர்கள் உள்ளங்களிலும் ஆழமாக பதிந்துள்ளது. மக்கள் சக்தியுடன் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்றார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக பேசிய அவர், “97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒரே நபர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் என பல குழப்பங்கள் உள்ளன. உண்மையான வாக்காளர்கள் யார் என்பதை கண்டறிய ஜனவரி 18 வரை நடைபெறும் முகாம்களில் தவெக தீவிரமாக பணியாற்றுகிறது. மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன” என்றார்.
மேலும், “இளைஞர்களின் வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். விடுபட்ட வாக்காளர்கள் யார் என்பதை கண்டறிந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகளின்படி தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஒரே முகாமில் மூன்று நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து, முதல் மாவட்டமாக தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்” என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தவெகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பியபோது, “ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இறுதி முடிவை ஓ.பன்னீர் செல்வமே எடுப்பார். கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
தொடர்ந்து, “அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் விரைவில் தவெகவில் இணைவார்கள். பொங்கல் முடிந்ததும் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை காணலாம்” என செங்கோட்டையன் கூறியிருப்பது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A turning point after Pongal OPS gives the OK signal to Vijay Happy news shared by Sengottaiyan