யஷ்வந்த் வர்மாவுக்கு உச்சநீதிமன்றத்தில் பின்னடைவு: பதவி நீக்கம் வழக்கில் மனு தள்ளுபடி...!
Yashwant Varma suffers setback Supreme Court His petition dismissal case rejected
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்து, நாட்டின் நீதித்துறையையே உலுக்கிய சம்பவமாக மாறியது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபோது, வீட்டிற்குள் கட்டுக்கட்டாக குவிக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பணத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தீர்மானம், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மூன்று உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை சபாநாயகர் அமைத்தார்.
ஆனால், இதே தீர்மானம் மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதையும், தன்னை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வத் தன்மையையும் எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து, கடந்த 8-ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், யஷ்வந்த் வர்மா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஒருவருக்கு, நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிராகரிக்க எந்த அதிகாரமும் இல்லை என்று தெளிவுபடுத்தினர்.
மேலும், 1968-ஆம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் படி, ஒரு நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம், மக்களவை சபாநாயகருக்கும் மாநிலங்களவை தலைவருக்கும் மட்டுமே உண்டு என உச்சநீதிமன்றம் முக்கியமாக குறிப்பிட்டது.
English Summary
Yashwant Varma suffers setback Supreme Court His petition dismissal case rejected