மேற்கு வங்கத்தில் பதற்றம்; திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள் வீசி தாக்குதல் ..!
Trinamool MP Abhishek Banerjee attacked with stones and eggs in West Bengal
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சந்திப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி இன்று சோனார்பூர் பகுதிக்குச் சென்றிருந்த போது அவர் மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது ஹெல்மெட் அணிந்திருந்த அபிஷேக் பானர்ஜியை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது, பாஜக தொண்டர்கள் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக ‘சோர் சோர்’ (திருடன் திருடன்) என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அபிஷேக் பானர்ஜியின் இந்தப் பயணத்தில் உள்ளூர் மக்களும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளதாவது;
''இந்தச் சம்பவம் அனைத்தும் பாஜகவால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் ஜனநாயகத்துக்கு இதுவே உதாரணம். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. போலீஸாரை எங்கும் காண முடியவில்லை. எனது பயணம் குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தரப்பட்டுள்ளது. என்றாலும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன். அவர்கள் வீட்டை உடைக்க முயல்கிறார்கள், என்னைக் கொல்ல விரும்புகிறார்கள்'' என்று பரபரப்பாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Trinamool MP Abhishek Banerjee attacked with stones and eggs in West Bengal