திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்: விஐபி தரிசனம் ரத்து..!
Tirupati Ezhumalaiyan Temple Brahmotsavam VIP darshan cancelled
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தையொட்டி அன்னமய்யா பவனில் மாவட்ட நிர்வாகம், திருப்பதி மாநகராட்சி, போலீசார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு பின் செயல் அதிகாரி, நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல்வர் சந்திரபாபுநாயுடு மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரம்மோற்சவத்தின் போது தினமும் காலை 08 மணி முதல் 10 மணி வரையும், இரவு 07 மணி முதல் 09 மணி வரையும் சுவாமி வீதி உலா பல்வேறு வாகனங்களில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 28-ஆம் தேதி மாலை 06.30 மணிக்கு கருட வாகன சேவை தொடங்கும என்றும், பிரம்மோற்சவம் நடைபெறும் 09 நாட்கள் அலங்காரத்திற்கு 60 மெட்ரிக் டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.3.50 கோடி மலர்களை நன்கொடையாளர்கள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அறைகளுக்கு ஆன்லைனில் வழங்கும் கோட்டா குறைக்கப்பட்டு நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிபாரிசு கடிதங்களின் மூலம் வழங்கப்படும் அறைகள் ஒதுக்கீடு 09-நாட்கள் இருக்காது எனவும், கடந்த ஆண்டு 09 நாட்களுக்கு ஒரு லட்சம் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 1.16 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கருட சேவையை தவிர்த்து மற்ற நாட்களில் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 25 ஆயிரம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாகவும், பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க 08 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், தலைமுடி காணிக்கை செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க 1,350 சவரத்தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 02 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்காக புதிதாக கட்டப்பட்ட யாத்திரிகள் சமுதாயக்கூடம் (பிஎஸ்சி 5) வெங்கடாத்திரி நிலையத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு 25ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், தரிகெண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் காலை 08 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அன்னப்பிரசாதம் வழங்கப்படும் எனவும், பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் அங்கப்பிரதட்சணம், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர், மூத்த குடிமக்கள், விஐபி தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செயல் அதிகாரி, கூறியுள்ளார்.
English Summary
Tirupati Ezhumalaiyan Temple Brahmotsavam VIP darshan cancelled