தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பு சட்டம்; மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ்..!
The Supreme Court has issued a notice seeking an explanation regarding the new law that prevents legal action against the Election Commissioner
தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம், பதவிக்காலம் மற்றும் அவர்களுக்கான சட்டபாதுகாப்பு குறித்த சட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் பிரிவு 16-இன் படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
அதாவது, தேர்தல் ஆணையர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும் போது செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகளுக்காக அவர்கள் பதவியில் இருக்கும் போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதாகும்.
ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மனுவில், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கூட குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநர்களுக்கோ இத்தகைய வாழ்நாள் கால பாதுகாப்பை வழங்கவில்லை. ஆனால், இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அதன் பின்னர் பேசிய நீதிபதிகள், 'நமது அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பாதுகாப்பை வழங்க முடியுமா, முடியாதா..? என்று ஆராய வேண்டியுள்ளது' என்று கூறியுள்ளனர். அத்துடன், இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தர விட்டுள்ளனர்.
அதேவேளை, மனுதாரர் கேட்டதற்கு இணங்க இப்போதைக்கு அந்தச் சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணை தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
The Supreme Court has issued a notice seeking an explanation regarding the new law that prevents legal action against the Election Commissioner