நாட்டில் முதல் முறை: ஏ.ஐ., கட்டுப்பாட்டு அறை திருப்பதியில் திறப்பு..!
The first AI control room in the country was inaugurated at the Tirumala Temple in Tirupati
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று (25-09-2025) திறந்து வைத்துள்ளார்.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சராசரியாக 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அதே சமயம் பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்ற சமயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து ஜன நெரிசல் ஏற்படும்.

இந்நிலையில், பக்தர்களின் தரிசன அனுபவத்தை மேம்படுத்த ஆந்திர அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நாட்டிலேயே முதன் முறையாக கோவிலில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிநுட்ப வசதி ஊடாக, கூட்ட நெரிசலை முன்கூட்டியே கணிப்பதோடு, பக்தர்கள் வரிசைகளை வேகமாக்கும் அதிகாரிகளால் உடனடியாக தகவல்களை அணுக முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வைகுண்டம் க்யூ காம்பிளக்ஸ் 01-இல் அமைந்துள்ள இந்த மையம், நவீன கேமராக்கள், முப்பரிமாண வரைபடம், நேரடி டிஜிட்டல் தகவல் திரை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர் குழுவால் நிர்வகிக்கப்படவுள்ளது.

இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 'முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருமலையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். 6,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் திருமலையை கண்காணிக்கின்றன. இந்த அமைப்பு நிமிடத்திற்கு 3.6 லட்சம் தரவுகளை அளிக்கும்' என கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக திருப்பதி வந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தார். அத்துடன், 102 கோடி ரூபாய் செலவில், 4,000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தை இருவரும் இணைந்து திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The first AI control room in the country was inaugurated at the Tirumala Temple in Tirupati