பயங்கரவாதி அபு பக்கர் சித்திக் பகீர் வாக்குமூலம்; வெடிகுண்டு தயாரிப்புக்கு எங்கெல்லாம் ஆட்கள் சேர்த்துள்ளார்..?
Terrorist abubakkar Siddique reportedly recruited people in Andhra Pradesh to make bombs
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்(60), என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஏழு நாள் காவலில் எடுத்து விசாரனை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பின்னர், மீண்டும் புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில், அபுபக்கர் சித்திக் அளித்த வாக்குமூலம் குறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்த 1998-இல், கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய புள்ளியாக அபுபக்கர் சித்திக் செயல்பட்டுள்ளார். மதுரையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற சம்பவத்திலும், 'பைப்' வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த, 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், வெளிநாடுகளுக்கு சென்று, பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டியுள்ளார் என்றும், ஆந்திராவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது போல வலம் வந்துள்ளதாகவும், அங்கு பல பகுதிகளுக்குச் சென்று, வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்களையும் வாங்கியுள்ளதாகவும், இவர் ஆந்திராவில் தங்கி இருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 30 கிலோ வெடி மருந்தை ஒப்படைத்துள்ளதாகவும், இவரது தலைமையில் தான் மற்றொரு பயங்கரவாதியான முகமது அலி செயல்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அபுபக்கர் சித்திக், தன்னிடம் இருந்த டிஜிட்டல் ஆவணங்களில் சதி திட்டம் தீட்டுதல், ரகசிய குறியீடுகள் குறித்த விபரங்களை எல்லாம் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அது பற்றிய தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Terrorist abubakkar Siddique reportedly recruited people in Andhra Pradesh to make bombs