திருப்பதி மலையில் சோதனை....! 120 பேர் கொண்ட குழு....எதற்காக?
team of 120 people raided Tirupati Hill
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ''ஆப்ரேஷன் சிந்தூர்'' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும், இதனால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆந்திர மாநில 'டி.ஜி.பி ஹரிஷ் குமார் குப்தா' உத்தரவின் பேரில் திருப்பதி காவலர் சூப்பிரண்டு 'ஹரிஷ் வர்தன் ராஜு' தலைமையில், திருப்பதி கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக ஆக்டோபஸ் படை, காவலர்கள், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 120 பேர் கொண்ட குழுவினர் சந்தேகத்திற்கு இடமான நபர்கள், முக்கிய இடங்கள், நெரிசலான பகுதிகளில் 4 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.
இதில் முக்கிய இடங்களான பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகை,ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை, அலிபிரி,வராக சாமி கோவில், 4 மாட விதிகள், கொல்ல மண்டபம், வெங்கடேஸ்வரா ஓய்வு இல்லம் உள்ளிட்ட இடங்களில் 16 காவல்துறை மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை செய்தனர்.
இதில் குறிப்பாக அலிபிரியில் பக்தர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்களை முழுமையாக சோதனை நடத்திய பிறகு திருப்பதி மலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. திருப்பதி மலை முழுவதும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திருப்பதியில் நேற்று 68,213 பேர் தரிசனமும்,29, 635 பக்தர்கள் முடி காணிக்கையும் செலுத்தினர்.இதில் ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதுடன், நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
English Summary
team of 120 people raided Tirupati Hill