எங்க கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்க! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் "உச்ச நீதிமன்றத்தில் 18ம் தேதி இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கிறோம். அதே நாளில் பிரதமர் மோடி இந்திய தேர்தல் ஆணையர் பெயரை பரிந்துரை செய்கிறார். இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரம்? நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் படி பார்த்தால் இந்திய தேர்தல் ஆணையர் பதவி மே மாதம் 15 ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. 

மே 15ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்கு காட்ட முடியுமா? ஒரே நாளில் அவசரகதியில் இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்?" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக கருத்து கூற விரும்பவில்லை. உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நபர் சிறப்பான நிர்வாகத் திறமை கொண்டவராக இருக்கிறார். ஆனால் எங்களது கவலை எல்லாம் தேர்ந்தெடுக்கும் முறை எப்படி இருக்கிறது என்பது குறித்து தான்" என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

"இந்திய தேர்தல் ஆணைய பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் தான் மிகவும் இளையவர். அப்படி என்றால் அவர் எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்" என்ன நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் "தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் விவரங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் இதற்கென உள்ள தனி இணையதளத்தில் தெளிவாக உள்ளது. யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்" என பதில் அளித்தார்.

இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என நீங்கள் சொல்கிறீர்கள். தேர்தல் ஆணையர்களின் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என சொல்கிறீர்கள். ஆனால் விரைவாகவே ஓய்வு பெற போகும் நபர்களை தேர்தல் ஆணையர் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறீர்கள். இது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் "பணி மூப்பு ஓய்வு பெறும் வயது உட்பட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் இறுதி செய்யப்படுகிறது" என பதில் அளித்தார்.

இந்த பதிலால் கடுப்பான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "எங்களது கேள்விக்கு நீங்கள் இப்பொழுதும் நேரடியாக பதில் தெரிவிக்கவில்லை"என காட்டமாக சாடினார். இதனைத் தொடர்ந்து "இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விஷயம் மிகவும் மர்மமானதாக இருக்கிறது" என கருத்து கூறினர். 

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் "எந்த ஆண்டு அதிகாரிகள் ஆனார்கள் என்பது முதல் விஷயம், அவர்களது பிறந்த தேதி இரண்டாவது விஷயம், அந்த குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர் என்பது மற்றும் பணியில் அவர்களது சர்வீஸ் உள்ளிட்டவை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும்" என பதில் அளித்தார்.

அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் "ஆறு ஆண்டுகள் தங்களது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நபர்களை நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கிறீர்கள். இது நியமன சட்டத்தை மீறுவதாக இருக்கிறது" என திட்டவட்டமாக தெரிவித்தனர். 

இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் "தேர்தல் ஆணையருக்கான பதவி நியமன சட்டத்தின் படி ஆறு ஆண்டுகள் என்று இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு வேண்டும் என்றே தேர்வு செய்துள்ளது. இந்த அமைப்பு சுதந்திரமான ஒரு அமைப்பாக இயங்குகிறது என்பது எப்படி நம்புவது?" என கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து மத்திய அரசும் மனுதாரர் தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court questioned central govt in the election officers case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->