ராகுல் காந்தி பேச்சை தடை; சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்; கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை..!
Rahul Gandhis letter to the Speaker regarding the ban on his speech
முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே, லடாக்கில் இந்திய ராணுவ நிலையை குறிவைத்து சீன ராணுவ பீரங்கிகள் அபாயகரமாக முன்னேறியதாக அவர் எழுதியுள்ள புதிய நூல் ஒன்றை குறிப்பிட்டு நேற்று ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். அவரது பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இந்த சர்ச்சை காரணமாக நேற்று மாலை முடங்கியது.
பதிப்பிக்கப்படாத நூலை குறிப்பிட்டு பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தியை தடுத்தார். இதனையடுத்து அவைக்குறிப்பிலிருந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதே நாளையில், இன்று காலை இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் ராகுல் அதே பேச்சை தொடங்கினார். ஆனால், குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானம் தவிர வேறு எது குறித்தும் பேசக்கூடாது என அவைத்தலைவர், அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி 08 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்காட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், லோக் சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது. என்னை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுத்தது ஜனநாயகம் மீதான கரும்புள்ளி என்று தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவரான என்னை மத்திய அரசின் அழுத்தத்தால் சபாநாயகர் பேச விடவில்லை என்றும் தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன என்றும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம்..
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.
மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul Gandhis letter to the Speaker regarding the ban on his speech