மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது – பிரதமர் மோடி வாழ்த்து
PM Modi congratulates Mohanlal on Dadasaheb Phalke Award
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்-க்கு, இந்திய சினிமாவின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 23ம் தேதி, நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் மோகன்லாலுக்கு மலையாள மொழியிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:“திறமை மற்றும் நடிப்பு பன்முகத்தன்மையின் சின்னம் மோகன்லால். பல தசாப்தங்களாக நீடித்த தனித்துவமான கலைப் பயணத்தின் மூலம் மலையாள சினிமா மற்றும் நாடகத் துறையில் அவர் ஒரு முக்கிய நபராக உள்ளார்.
அதேசமயம், கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த பற்றுக்கோளையும் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார். திரைப்படமும், நாடகமும் ஆகிய இரு தளங்களிலும் அவர் காட்டிய திறமை உண்மையான உத்வேகம் அளிக்கிறது. தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்கு அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கட்டும்.”
பிரதமரின் இந்த வாழ்த்துக்கு பதிலளித்த மோகன்லால், தனது எக்ஸ் பதிவில் நன்றியைத் தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:“ தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவுடனும் பெரும் மரியாதையுடனும் இருக்கிறேன். உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவை என்னை ஊக்கத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகின்றன. சினிமா கலைக்கும், என் பயணத்தை ஒளிரச் செய்த அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.”
சினிமா துறையில் அரை நூற்றாண்டுக்கு மேலாக பன்முகத் திறமையுடன் சாதனைகள் படைத்து வந்த மோகன்லாலுக்கு, ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
PM Modi congratulates Mohanlal on Dadasaheb Phalke Award