வாக்காளர் பட்டியல் முறைகேடு: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு புதிய சிக்கல்..!
New problem with Rahuls allegation of voter list irregularities
வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான காங்கிரஸின் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் ஆதாரங்களுடன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் ராகுல் காந்தி, அளித்த பேட்டியில் கூறியதாவது:
'நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திட்டமிட்ட ‘வாக்குத் திருட்டு’ நடந்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்துள்ளது. கர்நாடகாவின் ஆலந்த் மற்றும் மகாராஷ்டிராவின் ராஜுரா தொகுதிகளில் நடந்த முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன என்று பரபரப்பு குற்றசாட்டு முன் வைத்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சி வாக்காளர்களை குறிவைத்து சாப்ட்வேர் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர் பெயரை நீக்க நடந்த சில முறையற்ற முயற்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையமே தாமாக முன்வந்து அப்போதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாக கூறியுள்ளது. இது தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 06-ஆம் தேதியே மாநில காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தி தற்போது கேட்கும் தகவல்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநில அரசிடம் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன், மகாராஷ்டிராவின் ராஜோரா தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டையும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இதுகுறித்து ராஜோரா தொகுதி தேர்தல் பதிவு அதிகாரி தெரிவித்துள்ளதாவது: 'அக்டோபர் 01 முதல் 17-ஆம் தேதி வரை புதிய வாக்காளர் சேர்க்கைக்காக 7,592 விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்று தெரிவித்துள்ளார். மேலும், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் ஆய்வில், அவற்றில் 6,861 விண்ணப்பங்கள் போலி அடையாளங்கள், தவறான புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் காரணமாக செல்லாதவை என கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் எந்த போலி பெயரும் சேர்க்கப்படவில்லை’ என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் ராகுல் காந்தி தனது செய்தியாளர் சந்திப்பின்போது ஆதாரமாகக் காண்பித்த செல்போன் எண்ணுக்குரிய நபர், தனக்கு இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளமை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த அஞ்சனி மிஸ்ரா என்ற அந்த நபர், விற்பனைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த செல்போன் எண்ணை அவரே பயன்படுத்தி வருகிறார். வாக்காளர் பெயரை நீக்கம் செய்யக்கோரி எந்த விண்ணப்பமும் அளிக்காத நிலையில், தனது எண் எப்படி வெளியானது என அவர் கேள்வி எழுப்பியுள்ளதோடு அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.
அத்துடன், செய்தியாளர் சந்திப்பில் தனது மொபைல் எண் வெளியானதில் இருந்து, தனக்கு இடைவிடாமல் ஏராளமான அழைப்புகள் வருவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அஞ்சனி மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார். இந்த தொடர் தொந்தரவு காரணமாக, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
New problem with Rahuls allegation of voter list irregularities