மைசூரு தசரா செப்டம்பர் 22-ந்தேதி தொடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Mysuru Dasara starts from September 22nd Official announcement
புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி தொடங்கி அக்டோபர் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு பஞ்சமி திதி காரணமாக தசரா ஊர்வலம் ஒரு நாள் தள்ளி நடத்தப்பட இருப்பதாகவும், அதற்கு ஏற்ப இந்த ஆண்டு தசரா 11 நாட்கள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மைசூரு தசரா விழா குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கு பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து,அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனால் உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை மிகவும் விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்து தசரா விழா செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தசரா விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மொத்தம் 11 நாட்கள் தசரா விழா கொண்டாடப்பட உள்ளது.
செப்டம்பர் 22-ந் தேதி காலை 10.10 மணியில் இருந்து 10.45 மணிக்குள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளும் அம்மனுக்கு பூக்கள் தூவுவதன் மூலம் தசரா விழா தொடங்க உள்ளது. அக்டோபர் 2-ந்தேதி விஜயதசமி மற்றும் ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு நந்திக்கு பூஜை நடக்கிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக மாலை 4.42 மணியில் இருந்து 5.06 மணிக்குள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்கள் தூவப்படும்.
இந்த முறை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படுவதை தடுப்பதில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும்.
மைசூரு நகரின் அழகை மேம்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தசரா விழாவை காணவரும் பொதுமக்களுக்கு வசதியாக கூடுதலாக கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இந்த முறை அதிகளவு டிரோன் பறக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தசரா விழாவை பார்க்க வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். நமது பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தசரா விழா கொண்டாடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Mysuru Dasara starts from September 22nd Official announcement