ஆந்திர அரசியலில் புதிய பரபரப்பு – தகுந்த நேரத்தில் என் மகன் அரசியலுக்கு வருவார்- ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவி ஷர்மிளா!
My son will enter politics at the right time Andhra Pradesh Congress President Sharmila
ஆந்திரப் பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஓய்.எஸ். ராஜசேகர ரெட்டி. அவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரஸிலிருந்து பிரிந்து, தந்தை பெயரில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.
அவரது சகோதரி ஷர்மிளா, ஆரம்பத்தில் அந்தக் கட்சியில் இருந்தாலும், அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி, தெலுங்கானாவில் தனி கட்சி தொடங்கினார். பின்னர் காங்கிரஸில் இணைந்து, தற்போது ஆந்திர காங்கிரஸின் தலைவராக உள்ளார்.
அரசியலில் இருவரும் எதிர் பாளயங்களில் இருந்தாலும், குடும்ப உறவுகள் தொடர்ந்து உள்ளது. சமீபத்தில் ஷர்மிளா தனது மகன் ராஜா ரெட்டியின் காதல் திருமணத்தை விமரிசையாக நடத்தியபோது, ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், ஷர்மிளா மகன் ராஜா சமீப காலமாக தாயுடன் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவர் விரைவில் அரசியலுக்குள் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்னூலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஷர்மிளா, “தகுந்த நேரத்தில் என் மகன் அரசியலுக்கு வருவார்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, அவரது பாட்டி விஜயம்மா (ராஜசேகர ரெட்டியின் மனைவி) ராஜாவுக்கு உச்சிமுகர்ந்து ஆசீர்வதித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன் மூலம், ராஜா ரெட்டி விரைவில் ஆந்திர அரசியலில் களமிறங்குவார் என்ற பேச்சு அதிகரித்து வருகிறது. தற்போது இது ஆந்திர அரசியலில் சூடான விவாதமாக மாறியுள்ளது.
English Summary
My son will enter politics at the right time Andhra Pradesh Congress President Sharmila