குறைந்தபட்ச ஓய்வூதியம் 7500 ஆக உயர்வு..? விரைவில் ATM மூலம் பணம் எடுக்கும் திட்டம்..!
Minimum Pension to be Raised to rs 7500
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்காக EPFO திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் படி, ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும். அதேபோல நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்குவதோடு, இதற்கு வட்டியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், EPFO அமைப்பை வங்கி செயல்முறையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கி செயல்பாடுகள் ஆன்லைனில் எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோல, எதிர்காலத்தில் EPFO தொடர்பான அனைத்துப் பணிகளும் ஆன்லைனில் செய்யப்படும் என கூறப்படுகிறது.
தற்போது EPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது என்பது ஒரு நீண்ட செயல்முறையைக் கொண்டது. அதாவது, EPFO பயனர்கள் தற்போது பணத்தை எடுக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே ஆன்லைனில் விண்ணப்பம் செய்து காத்திருந்தால் அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் வரும்.
இந்நிலையில், EPFO 3.0 என்ற புதிய திட்டத்தின் மூலம் PF கணக்கில் இருக்கும் பணத்தை ATM மூலம் எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் பணத்தை அணுகுவது விரைவாகவும் எளிமையாகவும் மாற்றப்படும். இது தவிர, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (EPS-05) குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டு வரும், 1,000 ரூபாயால், அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என கூறி, குறைந்தபட்ச தொகையை ரூ. 7,500-ஆக உயர்த்த வேண்டும் என தொழிலாளர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஓய்வூதியத் தொகையை உயர்த்த நாடாளுமன்றக் குழுவும் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.1,000, ரூ.7,500 ஆக உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஓய்வூதிய மாற்றங்களுடன், நிதியாண்டு 2026-இல் கணக்குதாரர்களின் வைப்புநிதியில் 8.25 சதவிகிதம் வட்டி வரவை வழங்கவும் வாய்ப்புள்ளது. இந்த முன்மொழிவு, நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், கணக்குதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கோரிக்கை தீர்வுகள் விஷயத்தில் EPFO சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 2025–26ஆம் நிதியாண்டில், இது 8.31 கோடி கோரிக்கைகளைத் தீர்த்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில் இருந்த 6.01 கோடி கோரிக்கைகளைவிட கணிசமான உயர்வாகும். இவற்றில், 5.51 கோடி கோரிக்கைகள் முன்பணம் அல்லது பகுதித் தொகை திரும்பப் பெறுதல் தொடர்பானவை ஆகும்.
English Summary
Minimum Pension to be Raised to rs 7500