'விமர்சனத்தை தாங்க முடியாத பாசிச திமுக; சவுக்கு சங்கர் மீது புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்கை போட்டு கைது செய்துள்ளது'; மார்கண்டேய கட்ஜூ கண்டனம்..!
Markandey Katju condemned the DMK government stating that it has filed a false case against Savukku Shankar and arrested him because it could not tolerate the criticism
டிசம்பர் 13 அன்று மதுபான 'பார்' உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், பிரபல 'யு டியூபர்' சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் கதவை உடைத்து சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் கைதுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சவுக்கு சங்கரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளது. ஆனால், சமீப நாட்களாக இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றும், ஊழல் இல்லாமல் எதுவும் நடக்காத மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளதாகவும், இந்தியாவில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் ஆளப்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது இருந்த மாநிலத்தின் பொற்காலம், இந்தியாவின் சிறந்த மாநிலம் என முன்னாள் பிரதமர் நேருவால் புகழப்பெற்றது. ஆனால், தற்போது அதற்கு மாறுபட்ட நிலை நிலவுகிறதாகவும், நேர்மைக்கு ஒரு உதாரணமாக காமராஜர் திகழ்ந்தார் என்றும் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் ஊழல் மற்றும் பிற தவறுகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையோ அல்லது விமர்சனத்தையோ சகித்துக்கொள்ள விரும்பாத ஆளும் புதிய பாசிச திமுக ஆட்சி, மாற்றுக்குரலையும் அடக்குவதற்காக மாநிலத்தில் ஒரு பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் துணிச்சலான, நேர்மையான மற்றும் பிரபலமான யூடியூபர் ஆக சவுக்கு சங்கர் உள்ளார். அவர் தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து அதன் பெரும் ஊழலை அம்பலப்படுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கும் எந்தவொரு விமர்சனத்தையும் திமுக கடுமையாக எதிர்க்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், விமர்சனத்தை சகித்துக் கொள்ள விரும்பாமல் சவுக்கு சங்கரை கடந்த 13-ஆம் தேதி அப்பட்டமாக புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட மற்றும் இட்டுக்கட்டி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் திமுக அரசை கண்டித்ததுடன், சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக தங்களுக்கு சாதகமாக இல்லாத பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது திமுக அரசு இயந்திரத்தை பயன்படுத்துகிறது என்று இபிஎஸ் குற்றம் சாட்டினார். மேலும் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் கோரிக்கை வைத்தார்.
இவரை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும், சவுக்கு சங்கரின் கைது நடவடிக்கையை கண்டித்ததுடன், திமுக அரசை 'பாசிச அரசு' என விமர்சனம் செய்ததோடு, கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம் சுமத்தினார்.
இவர்களை தொடர்ந்து, திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்பி கார்த்தி அவர்களும், சவுக்கு சங்கரின் கருத்துகளில் வேறுபட்டு இருந்தாலும், அவரை கைது செய்தது அப்பட்டமான துன்புறுத்தல் என விமர்சனம் செய்துள்ளார். மேலும், சவுக்கு சங்கர் கைதுக்கு பிரபல பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன, ஆனால், அது பாஜ, திமுக அல்லது சிபிஎம் அரசாக இருந்தாலும், அவர்களில் யாரும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளதோடு, நீதிமன்றங்களும் இதை அரிதாகவே கேள்வி கேட்கின்றன. அரசை விமர்சனம் செய்ததால் தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு எதிராக செயல்படும் சில போலீசார், மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே சவுக்கு சங்கர் போன்றவர்களை கைது செய்கின்றனர். இதை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இழிவான மற்றும் அருவருப்பான செயலை கண்டித்து சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜூ அவருடைய கட்டுரையில் கூறியுள்ளார்.
English Summary
Markandey Katju condemned the DMK government stating that it has filed a false case against Savukku Shankar and arrested him because it could not tolerate the criticism