காங்கிரசால் தான் எஸ்.சி எஸ்.டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அதிகரித்தது - சித்தராமையா பேச்சு.!
karnataka sc st reservation increase sidhamaiya speech
"கர்நாடக மாநிலத்தில் தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தினர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க தாங்கள் தான் காரணம் என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பா.ஜ.க வினர் முயற்சிக்கின்றனர்.
ஆனால், உண்மையிலேயே இரண்டு சமூகங்களுக்கும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல முறை மாநில அரசை, காங்கிரஸ் கட்சி தான் வலியுறுத்தியது. இதற்காக சட்டசபை கூட்டத்தொடரில் மூன்று முறை விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அப்போது காங்கிரஸ் கட்சி போராட்டமும் நடத்தி இருந்தது.
காங்கிரஸ் கட்சி மாநில அரசுக்கு கொடுத்த அழுத்ததின் காரணமாக தற்போது தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தினர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நீதிபதி நாகமோகனதாஸ் அரசுக்கு அறிக்கை அளித்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.
இதையடுத்து, நீதிபதி அறிக்கை அளித்த பிறகும் அரசு இடஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை. அதன் பின்னர் வால்மீகி சமுதாயத்தை சேர்ந்த குருபீட மடாதிபதி சுமார் 150 நாட்களுக்கும் மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். இதுபோன்ற சில காரணங்களால் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் இடஒதுக்கீடு அவசர சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற இரண்டு நாட்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இதைத்தொடர்ந்து, சிறப்பு கூட்டத்தை கூட்டினால், இடஒதுக்கீடு அவசர சட்டத்தை நிறைவேற்றி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசலாம். இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு, எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
English Summary
karnataka sc st reservation increase sidhamaiya speech