இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சு திடீர் தள்ளிவைப்பு…! - வரி குழப்பத்தில் ஒப்பந்தம் தாமதம்!
India US trade talks suddenly postponed Agreement delayed tax confusion
இந்தியா-அமெரிக்கா இடையேயான முக்கிய வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று வாஷிங்டன், D .C. நகரில் நடைபெற இருந்த நிலையில், எதிர்பாராத காரணங்களால் அது தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரலில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதிப்புகளை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த வரி விதிப்பை தொடர்பான வழக்கில் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சில புதிய வரிகளை ரத்து செய்தது.இதனைத் தொடர்ந்து, அமெரிக்க சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் 10% வரி விதிக்கப்படும் என்றும், பின்னர் அது 15% ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய வரி நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, அமெரிக்காவுக்கு ‘மிகவும் விருப்பமான நாடு’ என்ற அந்தஸ்து காரணமாக இந்திய பொருட்களுக்கு குறைந்த வரி மட்டுமே இருந்தது. பின்னர் 25% வரி உயர்வு அறிவிக்கப்பட்டது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றச்சாட்டு முன்வைத்து கூடுதல் 25% வரியும் சேர்க்கப்பட்டதால், மொத்தமாக 50% வரி விதிக்கப்பட்டது.இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய பொருட்கள் மீதான வரி 18% ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் மார்ச் மாதத்தில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்ப்பு உருவானது.அதற்கான முன்னோட்டமாக இன்று நடைபெற இருந்த இருதரப்பு ஆலோசனை, அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் புதிய வரி உயர்வு காரணமாக ஏற்பட்ட குழப்பநிலையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்து அமெரிக்கா இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியிடாததால், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
India US trade talks suddenly postponed Agreement delayed tax confusion