அவசர ஆலோசனையில் பிரதமர் மோடி! அதிகாரபூர்வ போராக மாறுமா?!
India Pakistan Conflict PM Modi urgent meet
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலளித்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கியது. மே 7ஆம் தேதி சுமார் 25 நிமிடங்களில் 26 தாக்குதல்களை நிகழ்த்திய இந்தியா, 9 முக்கிய முகாம்களை அழித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதே இரவில் பாகிஸ்தான் எல்லையை கடந்து ஷெல் வீச்சும், டிரோன் தாக்குதல்களும் நடத்தி, அடுத்த இரண்டு நாள்களிலும் தாக்குதல்களை தொடர்ந்தது. இந்தியா அனைத்து தாக்குதல்களுக்கும் பதிலடி அளித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத்தின் எல்லைப் பகுதிகளை நோக்கி டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ‘ஃபட்டா-2’ என்ற அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணையைக் கொண்டு தாக்கியதோடு, டெல்லியையும் குறிவைத்தது. இந்த ஏவுகணையை இந்தியா வானிலேயே அழித்தது.
வழிபாட்டு தலங்கள், மருத்துவ வசதிகள், ராணுவ தளங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் என பல்வேறு இடங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இந்தியா பாகிஸ்தானின் ராணுவத் தளங்களை துல்லியமாக தாக்கியது. பாகிஸ்தான் படைகள் எல்லை நோக்கி நகர்த்தப்படுவதாகவும், நிலைமை அதிகாரப்பூர்வ போராக மாறக்கூடும் எனவும் ராணுவம் எச்சரித்துள்ளது. எல்லை பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடுகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
English Summary
India Pakistan Conflict PM Modi urgent meet