ஐஸ்கிரீம் விற்பனையின் போது தகராறு; தலையை துண்டித்து அடுப்பில் எரித்த கொடூரம்; உ.பியில் அதிர்ச்சி..!
Ice Cream Vendor Beheaded in UP
உத்தரப்பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள பாராபெஹதா கிராமத்தைச் சேர்ந்தவர் பப்லு. 25 வயதான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்ப வாழ்வாதாரத்துக்காக ஊர் ஊராக சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று தனது ஊரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்சாவல் கிராமத்திற்கு ஐஸ்கிரீம் விற்பனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஊரின் மையப் பகுதியில் ஐஸ் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்கு 50 வயதான சங்கர் என்பவர் 'இங்கெல்லாம் ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது' என்று கூறியுள்ளார். ஆனால், அதை காதில் வாங்கிக் கொள்ளாத பப்லு தொடர்ந்து ஐஸ் விற்பனை செய்துள்ளார்.
அதை பார்த்து ஆத்திரமடைந்த சங்கர், பப்லுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. உடனே சங்கர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் பப்லுவை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அப்போது ஆத்திரம் அடங்காத அவர் பப்லுவின் தலையை துண்டித்து எடுத்துள்ளார். அதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஐஸ் கிரீம் வியாபார செய்த ஒருவரை தலையை துண்டித்து கொலை செய்தது மட்டுமல்லாமல் வெட்டப்பட்ட தலையை தனது கையில் எடுத்துக் கொண்டு சங்கர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சங்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு சமையல் செய்து கொண்டிருந்த அவர், வெட்டப்பட்ட தலையை அடுப்பில் வைத்து எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலிசார் லேசாக எரிந்த நிலையில் இருந்த தலையை கைப்பற்றி சங்கரை கைது செய்துள்ளனர்.
ஐஸ் விற்பனை தொடர்பான வாக்குவாதத்தில்தான் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற மாறுப்பட்ட கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
Ice Cream Vendor Beheaded in UP