மந்த்ராலயத்தில் குளித்தபோது நேர்ந்த பயங்கரம்...! சிறுமியைப் போராடி காப்பாற்றிவிட்டு 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்...!
horror that happened while bathing Mantralayam pity that 5 people swept away river after fighting save little girl
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்த்ராலயம் பகுதி வழியாக துங்கபத்ரா ஆறு பாய்கிறது. புனிதத் தலமாக விளங்கும் இந்த பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுடன், விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் ஆற்றில் குளித்து மகிழ்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மந்த்ராலயத்திற்கு வந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் நேற்று மாலை துங்கபத்ரா ஆற்றில் குளிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் கரையோரத்தில் தங்கியிருந்த நிலையில், மற்றவர்கள் ஆற்றுக்குள் இறங்கி குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, ஆற்றின் ஆழம் குறித்து அறியாமல் முன்னோக்கி சென்ற அபர்ணா என்ற சிறுமி, திடீரென வேகமான நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.
இதைக் கண்டு பதற்றமடைந்த உறவினர்கள், அவரை காப்பாற்றும் நோக்கில் அடுத்தடுத்து ஆற்றுக்குள் பாய்ந்தனர்.ஆனால் எதிர்பாராத விதமாக, சிறுமி நீந்தி போராடி கரையை அடைந்த நிலையில், அவரை மீட்கச் சென்ற 5 பேர் ஆற்றின் சுழல் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
கரையில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்ற தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் உடல்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஒரு சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் சிக்கிய இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
horror that happened while bathing Mantralayam pity that 5 people swept away river after fighting save little girl