ஆந்திராவில் கோர விபத்து: டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதி தீ விபத்து - 14 பயணிகள் பலி!
Horrific Bus Accident in Andhra 14 Dead as Private Bus Collides with Lorry and Catches Fire
ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், தனியார் பேருந்து மற்றும் லாரி மோதித் தீப்பிடித்ததில் 14 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்து நடந்தது எப்படி?
தெலங்கானா மாநிலம் நிர்மல் பகுதியிலிருந்து 41 பயணிகளுடன் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நேற்று காலை சுமார் 6:30 மணியளவில், ஆந்திராவின் மார்க்காபுரம் மாவட்டம் ராயவரம் பகுதியில் பேருந்து வந்தபோது, ஒரு டிப்பர் லாரி அதனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் டீசல் டேங்க் மீது பேருந்து மோதியதில், இரண்டு வாகனங்களும் பயங்கரமான வேகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கின.
உயிரிழப்புகள் மற்றும் மீட்புப் பணி:
கோர மரணம்: பேருந்தின் முன் இருக்கையில் இருந்தவர்கள் உடனடியாகக் குதித்து உயிர் தப்பினர். ஆனால், பின் இருக்கையில் இருந்தவர்களால் தீயின் வேகத்தால் வெளியே வர முடியாமல் போனது. இதில் 7 பெண்கள் மற்றும் 5 மாத குழந்தை உட்பட மொத்தம் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள்: விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 27 பயணிகள் மீட்கப்பட்டு மார்க்காபுரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெகிழ்ச்சிச் சம்பவம்: உயிரிழந்தவர்களில் ஒருவரான ரமாதேவி என்பவர், தனது மகன் மனோகரை பேருந்து ஜன்னல் வழியாக வெளியே தள்ளி காப்பாற்றிவிட்டு, தான் மட்டும் நெருப்பில் சிக்கி உயிரிழந்தது அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்தது.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆந்திர அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Horrific Bus Accident in Andhra 14 Dead as Private Bus Collides with Lorry and Catches Fire