நெஞ்சை பதறவைக்கும் துயரம்...! விஷக்காற்றாக மாறிய பூச்சிமருந்து...தூங்கிய இடத்திலேயே 2 மகள்கள் பலி...! நடந்தது என்ன...?
Heartbreaking tragedy Pesticide turned poisonous air 2 daughters died same place they slept What happened
வீட்டின் ஒரு அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததாக கூறப்படும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மற்றும் 4 வயது சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ் தேபேகர். விவசாயியான இவருக்கு ஆரோகி (6), ஆராத்யா (4) என இரண்டு மகள்கள் இருந்தனர்.

மல்லேஷ் தனது விவசாய நிலத்தில் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தார். கொண்டைக்கடலையை பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக அதில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துக்கு முந்தைய இரவு மல்லேஷ், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே அறையில் தூங்கியுள்ளனர்.
தூங்கச் செல்லும்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இதனால், கொண்டைக்கடலையில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு அறைக்குள் தேங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.அந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே, பிஞ்சுக் குழந்தைகளான ஆரோகி மற்றும் ஆராத்யா இருவரும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நிலைகுலைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.இதனால் பதற்றமடைந்த பெற்றோர், இரு குழந்தைகளையும் உடனடியாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இரு சிறுமிகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே சிறுமிகள் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இரு பிஞ்சு குழந்தைகளின் திடீர் உயிரிழப்பு பாலாப்பூர் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த சிறுமிகளின் உடல்களுக்கு நேற்று கிராம மக்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.பிஞ்சு குழந்தைகளை இழந்த பெற்றோரின் துயரம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Heartbreaking tragedy Pesticide turned poisonous air 2 daughters died same place they slept What happened