ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மத்திய அரசுக்கு ஆண்டுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்?.. ஸ்டேட் வங்கி அறிக்கை!
GST reform How much will the central government lose per year State Bank report
புதுடில்லி: 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் போன்ற பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும்.
இந்த மாற்றங்களால் ஆண்டுதோறும் ரூ.18,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு கணித்திருந்தது. ஆனால், ஸ்டேட் வங்கி வெளியிட்ட மதிப்பீட்டின்படி, அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ.3,700 கோடி மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என எஸ்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 295 அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி விகிதம் 12% இலிருந்து 5% அல்லது பூஜ்ஜியம் வரை குறைக்கப்பட்டுள்ளதால், சில்லறை பணவீக்கம் கணிசமாகக் குறையும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடாந்திர ரூ.3,700 கோடி இழப்பு என்பது மிகக் குறைவானதாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையில் எந்தவிதமான எதிர்மறை தாக்கமும் ஏற்படாது என்றும் எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
GST reform How much will the central government lose per year State Bank report