AI ஆபாச VIDEO , டீப்பேக் பரவல் அதிகரிப்பு…! - சமூக ஊடகங்களுக்கு கடும் விதிமுறைகள் விதித்த மத்திய அரசு!
AI false VIDEO DeepBack spread increases Central government imposes strict regulations social media
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆபாசம், போலி மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

சமீப காலமாக ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதனை தவறாக பயன்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. ஏமாற்றும் வகையிலான டீப்பேக் வீடியோக்கள், அனுமதியில்லா தனிப்பட்ட படங்கள், பாலியல் சுரண்டல் தொடர்பான காட்சிகள், குழந்தைகள் குறித்த ஆபாச உள்ளடக்கங்கள், போலி ஆவணங்கள், வெடிகுண்டு தயாரிப்பு தகவல்கள், ஆள்மாறாட்ட வீடியோக்கள் போன்றவை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இது பொதுமக்களின் பாதுகாப்புக்கும் தனியுரிமைக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.இந்தப் பின்னணியில், இதுபோன்ற அபாயகரமான டிஜிட்டல் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டு வந்துள்ளது.
இந்த விதிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் நிலையில், ஆன்லைன் தளங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதலின்படி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டீப்பேக் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை, தகுதியான அதிகாரிகள் அல்லது நீதிமன்றம் குறியிட்டால், எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் 3 மணி நேரத்துக்குள் கட்டாயமாக அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம், ஏ.ஐ. மற்றும் டீப்பேக் உள்ளடக்கங்களுக்கு முதன்முறையாக தெளிவான வரையறை வழங்கப்பட்டுள்ளது.
பயனர்களின் புகார்களை விரைவாக தீர்க்கும் காலக்கெடும் குறைக்கப்பட்டுள்ளது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, இந்த புதிய விதிமுறைகள் வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
டிஜிட்டல் உலகில் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
English Summary
AI false VIDEO DeepBack spread increases Central government imposes strict regulations social media