5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் டிக்கெட் கட்டாயமா.? ரயில்வே துறை விளக்கம்.!
5 year Babies Ticket issue Cleared
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் பயணங்களின் போது டிக்கெட் வாங்குவது குறித்த சமூக வலைதள வதந்திகளுக்கு ரயில்வே துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் ரயிலில் டிக்கெட் எடுக்கும் வழக்கம் இருந்துவருகிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. அது போல அவர்களுக்கு இருப்பிடங்களும் படுக்கைகளும் கொடுக்கப்படுவது இல்லை.
ஒருவேளை அப்படி குழந்தைகளுக்கு இருப்பிடம் வேண்டும் என்றால் அதற்கு தனியாக பெரியவர்களுக்கு செலுத்தும் கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொண்டால் இருக்கை கிடைக்கும். இதுதான் இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒன்று முதல் நான்கு வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு 50 சதவீத கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பெற வேண்டுமென்று ரயில்வே துறையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியது.
இத்தகைய சூழலில் இது குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், " ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை.
பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக்கொள்ளலாம். தனி இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துகொள்ளலாம்."என்று தெரிவித்துள்ளது.
English Summary
5 year Babies Ticket issue Cleared