மத்திய பிரதேசம் : லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி, 9 பேர் காயம்.!
5 killed 9 injured in 2 lorry accident in madhya pradesh
மத்திய பிரதேசத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தின் தெத்தளை-ஷேகுபுரா சாலையில் சென்று கொண்டிருந்த கரும்பு ஏற்றிச் சென்ற லாரியும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற மற்றொரு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து கரும்பு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
5 killed 9 injured in 2 lorry accident in madhya pradesh