16 வயது முஸ்லிம் சிறுமி திருமண வழக்கு – NCPCR மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
16 yearold Muslim girl marriage case Supreme Court gives dramatic verdict in NCPCR appeal case
16 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர், 30 வயது இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட வழக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தம்பதிக்கு வழங்கிய பாதுகாப்பை எதிர்த்து குழந்தைகளுக்கான தேசிய ஆணையம் (NCPCR) தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வழக்கின் பின்னணி
2022-ஆம் ஆண்டு, 16 வயது முஸ்லிம் சிறுமி, 30 வயது இளைஞரைத் திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு அச்சுறுத்தல்கள் எழுந்ததை அடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, NCPCR உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, “உயர்நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு உத்தரவை ரத்து செய்ய எங்களுக்கு காரணமே இல்லை. குழந்தைகளுக்கான நல ஆணையம் இவ்வாறு தலையிடத் தேவையில்லை” என்று தெரிவித்தது.
நீதிபதிகள் கண்டனம் தெரிவிக்கையில்:
“ஒரு சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்து, குழந்தையையும் பெற்றிருக்கிறார். இதில் ஆணையம் ஏன் பிரச்னை செய்கிறது? இத்தகைய தேவையற்ற வழக்குகள் கௌரவக் கொலைகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உண்டு.”
“பருவ வயதில் காதலில் விழுவது இயல்பு. இதை குற்றச் செயலாகக் கருதி வழக்குகள் தொடரக்கூடாது. நீதிமன்றத்தின் நோக்கம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதே.”
சட்ட ரீதியான சிக்கல்
முஸ்லிம் தனிநபர் சட்டப்படி – 15 வயதைக் கடந்த அல்லது பருவமடைந்த பெண் திருமண வயதை எட்டியவராகக் கருதப்படுகிறார்.
போக்சோ (POCSO) சட்டப்படி – 18 வயதுக்கு குறைவானவருடன் திருமணம் குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும்.
இந்த முரண்பாடு தொடர்ந்து சட்ட ரீதியான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
உச்சநீதிமன்ற எச்சரிக்கை
நீதிபதிகள், “காதல் விவகாரங்களை குற்றச் செயல்களாக மாற்றி பொய்வழக்குகள் பதிவு செய்தால், அது கௌரவக் கொலைகளை தூண்டிவிடும்” என்று எச்சரித்தனர்.
மேலும், இதேபோன்ற மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், NCPCR முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.
NCPCR தரப்பின் வாதம்
குழந்தைகளுக்கான நல ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, “திருமண வயதை எட்டாத சிறுமி திருமணத்தில் ஈடுபடுவது சட்ட ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். எனினும், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
English Summary
16 yearold Muslim girl marriage case Supreme Court gives dramatic verdict in NCPCR appeal case