சினிமாவின் “அம்மா” நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் அம்மா – மகளால் கிடைத்த பெருமை.. துள்ளிக்குதித்த சரண்யா பொன்வண்ணன்!
The mother of cinema is also a super mother daughter in real life Saranya Ponvannan jumped
தமிழ் சினிமாவில் “அம்மா” ரோல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் — நடிகை சரண்யா பொன்வண்ணன். தனுஷ், சூர்யா, விஷால், சசிக்குமார், விஷ்ணு விஷால் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைத் தாயாக நடித்த சரண்யா, இப்போது நிஜ வாழ்க்கையிலும் “சூப்பர் அம்மா” என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
கமல்ஹாசனுடன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சரண்யா, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். ரெட்டை ஜடையில், பாவாடை தாவணியில் தோன்றிய அந்த அழகுப் பதுமை, அதன் பிறகு “மனசுக்குள் மத்தாப்பூ”, “என் ஜீவன் பாடுது”, “கருத்தம்மா”, “மீண்டும் சாவித்திரி” போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகையாக திகழ்ந்தார்.
சினிமாவில் பிஸியாக இருந்த காலத்திலேயே, 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, இரு பெண் குழந்தைகள் பிறந்ததும் அவர்களை கவனிக்க சினிமாவை தற்காலிகமாக விட்டு விலகினார். பின்னர், குழந்தைகள் வளர்ந்ததும் மீண்டும் சினிமாவிற்கு திரும்பி, ஜீவா நடித்த ‘ராம்’ படத்தில் தாய் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, “தவமாய் தவமிருந்து”, “எம்டன் மகன்”, “கிரீடம்”, “புலி வருது”, “களவாணி”, “பாண்டி”, “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “தென்மேற்கு பருவக்காற்று” போன்ற பல படங்களில் தொடர்ந்து தாய் கதாபாத்திரங்களிலும் மெருகேற்றினார்.
சரண்யா-பொன்வண்ணன் தம்பதியரின் இரண்டு மகள்கள் — பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி. சினிமா பக்கம் செல்லாமல், இருவரும் மருத்துவம் துறையைத் தேர்ந்தெடுத்து சாதனை படைத்துள்ளனர்.
பிரியதர்ஷினி குழந்தைகள் நல மருத்துவராகவும், சாந்தினி மகப்பேறு மருத்துவராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.
அண்மையில், சரண்யா தனது மூத்த மகள் பிரியதர்ஷினியின் MD Pediatrics பட்டமளிப்பு விழா வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.
சரண்யாவின் இரு மகள்களும் சமீபத்தில் ஒரு யூடியூப் பேட்டியிலும் கலந்து கொண்டு, “டாக்டராக வேண்டும் என்பது எங்களுடைய ஆசைதான், அப்பா அம்மா எதையும் திணிக்கவில்லை. ஆனால், அம்மா எப்போதும் படிக்க வேண்டும் என்று ஊக்குவிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அம்மா கட்டாயம் நாங்கள் விரும்பும் உணவை சமைப்பார்கள்” என்று பகிர்ந்துள்ளனர்.
திரையில் தாயாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த சரண்யா பொன்வண்ணன், நிஜ வாழ்க்கையிலும் தனது மகள்களை வெற்றிப்பெற்ற மருத்துவர்களாக வளர்த்து, உண்மையான “அம்மா” என்ற பங்கையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.
English Summary
The mother of cinema is also a super mother daughter in real life Saranya Ponvannan jumped