Freedom Fighters : விடுதலை போராட்ட வீரர்... அண்ணல் தங்கோ... யார் இவர்?!
Annal thango history
அண்ணல் தங்கோ:
ஒரு தனித்தமிழ் அறிஞரும், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் ஆன அண்ணல் தங்கோவை பற்றிய சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
தங்கோ 1904ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முருகப்பன், மாணிக்கம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சுவாமி நாதன்.
கல்வி :
தொடக்கக்கல்வி மட்டுமே படித்த இவர், தனது சுயமுயற்சியால் தமிழ் மற்றும் பலமொழிகளில் புலமை பெற்றார்.
திருமண வாழ்க்கை :
தங்கோ 1927ஆம் ஆண்டு சிவமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.
விடுதலை போராட்டத்தில் அண்ணல் தங்கோவின் பங்கு :
தங்கோ 1918ஆம் ஆண்டு விடுதலை போராட்டத்திற்காக காங்கிரஸில் இணைந்தார். 1923ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியல், 1925ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம், 1927ஆம் ஆண்டு சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930ஆம் ஆண்டு உப்புசத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்று 5 முறை சிறை சென்றார்.
1936ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார்.
1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும், சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் 'தமிழர் கழகம்" என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார்.
வேலூரில் 1937ஆம் ஆண்டு உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும், சான்றோர்களையும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார்.
1937ஆம் ஆண்டு மற்றும் 1938ஆம் ஆண்டு தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார். 1942ஆம் ஆண்டு 'தமிழ் நிலம்" என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
அண்ணல் தங்கோவின் மறைவு :
தன் வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும், தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட அண்ணல் தங்கோ 1974ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மறைந்தார்.