ஓடும் பேருந்தில் நடந்த விபரிதம் : சடலத்துடன் நடு ரோட்டில் இறக்கி விட்ட பரிதாபம்!
சடலத்துடன் நடு ரோட்டில் இறக்கி விட்ட பரிதாபம்!
அரசு பேருந்து ஒன்றில் பயணித்த பயணி திடீரென உயிரிழந்ததால் அந்தப் பேருந்து நடத்துனர் இறந்தவரின் நண்பரை சடலத்துடன் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் இருந்து திருக்கோவிலூர் சென்ற அரசு பேருந்து ஒன்றில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பயணித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த வீரன் என்ற கட்டிட தொழிலாளி, பெங்களூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் நேற்று மதியம் தனது நண்பர் ராதாகிருஷ்ணனுடன் பெங்களூரில் இருந்து அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பேருந்தானது சூளகிரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வீரன் என்ற தொழிலாளி உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.
உடனே இதனை அறிந்த அப்பேருந்து நடத்துனர் சூளகிரி புறவழிச்சலையிலேயே பேருந்தை நிறுத்தி, இறந்தவரின் சடலத்துடன் அவரது நண்பரையும் இறக்கிவிட்டுள்ளார். அதோடு அவர்கள் பயணித்த அந்த பயணச்சீட்டையும் வாங்கிச் சென்றுள்ளார்.
பின்னர் இதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணிநேரம் இறந்த வீரனின் சடலத்துடன், சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அந்நபர் காத்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சூளகிரி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தனியார் ஆம்புலன்ஸில் அந்நபரை சடலத்துடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
A traveler who died in a running bus