தமிழகம் வந்த அமிதாஷா.! பாஜக கூட்டணி உறுதி.! எத்தனை தொகுதிகளில் போட்டி.!!
amit shah in erode
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்திய அரசியல் களமே சூடு பிடித்து உள்ளது. தமிழகத்தில் கேட்கவே வேண்டாம் அனல் பறக்க கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. ஆளும் பாஜக கட்சி தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று தமிழகம் வந்துள்ள பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா அவர்களை தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கோவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பின்னர், கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு வந்தடைந்தார். அங்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நெசவாளர்களை சந்தித்து அவர்களின் முக்கிய கோரிக்கை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார்.
இதனையடுத்து, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய 4 பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகங்களை பொறுப்பாளர்களுக்கு எடுத்து உரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி மற்றும் எச்.ராஜா, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக கைத்தறி நெசவாளர்களிடையே பேசிய அமித்ஷா அவர்கள், ''ஜவுளித்துறையில் 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய அரசு முயன்று வருகிறது. விசைத்தறியை மேம்படுத்த தமிழகத்திற்கு மட்டும் ரூ 161 கோடி நிதியை, மத்திய அரசு வழங்கியிருக்கிறது. 2019-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும். காங். கூட்டணியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு திமுக என்ன செய்தது? திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல'' என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற ஒரு கூட்டணி அமையும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.