ஈரானுக்கு MANPADs வழங்கும் சீனா..? டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை..!
US President Issues Stern Warning to China for Supplying MANPADs to Iran
ஈரானுக்கு ஆதரவாக சீனா ஆயுதங்களை வழங்கினால், சீன இறக்குமதிகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுத போட்டி காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. சீனா ஈரானுக்கு தோளில் வைத்து ஏவக்கூடிய 'மேன்பேட்ஸ்' (MANPADs) எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைத் தகவல்களை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
இது குறித்து ட்ரம்ப் கூறுகையில்; ''சீன ஜனாதிபதியுடன் தமக்கு நல்லுறவு இருப்பதால் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று தாம் நம்பவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒருவேளை ஆயுதப் பரிமாற்றம் உறுதி செய்யப்பட்டால் "மலைக்க வைக்கும் அளவிலான" 50 சதவீத வரிவிதிப்பை சீனா எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனத் தூதரகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், "சீனா மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்பிற்கும் ஆயுதங்களை வழங்கவில்லை; இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒரு பொறுப்புள்ள நாடாக சீனா தனது சர்வதேச கடமைகளைச் சரியாக நிறைவேற்றி வருவதாகவும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி பதற்றத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும் என்றும் சீனா அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
English Summary
US President Issues Stern Warning to China for Supplying MANPADs to Iran