காங்கோவில் கோர விபத்து: 200 தொழிலாளர்கள் பலி! மின்னணு சாதனங்களுக்காக மண்ணுக்குள் புதைந்த உயிர்கள்!
Over 200 Miners Buried in DRCs Rubaya Coltan Mine Rebels Allegedly Hide Death Toll
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் ருபாயா பகுதியில் உள்ள கனிமச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் விமான என்ஜின்கள் தயாரிப்பில் மிக முக்கியமான 'கோல்டன்' (Coltan) தாது வெட்டியெடுக்கப்படும்போது இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.
மறைக்கப்படும் மரணங்கள்:
இந்தச் சுரங்கப் பகுதி தற்போது ரவாண்டா ஆதரவு பெற்ற எம்.23 (M23) என்ற கிளர்ச்சிக் குழுவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. விபத்து குறித்துப் பேசிய கிளர்ச்சிக் குழுவினர் "வெறும் 5 பேர் மட்டுமே இறந்தனர்" என மழுப்பினாலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்ட உடல்களை நேரில் மீட்டுள்ளதாகப் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். உண்மை வெளியே கசிந்தால் தங்களுக்கு ஆபத்து எனச் சுரங்க உரிமையாளர்கள் மிரட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பத்தின் பின்னால் இருக்கும் 'இரத்தம்':
உலகத் தேவையில் 15 சதவீதத்திற்கும் அதிகமான 'டான்டலம்' உலோகம் இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே கிடைக்கிறது. இது வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டதால் மின்னணுப் பொருட்களின் மின்தேக்கிகள் (Capacitors) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களின் லாப வேட்டை:
கடந்த மே மாதம் முதல் இந்தச் சுரங்கத்தை ஆக்கிரமித்துள்ள கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்து எடுக்கப்படும் கனிமங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் மாதம் தோறும் சுமார் ரூ.6.7 கோடி ($8 லட்சம்) வருமானம் ஈட்டி வருகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கித் தொழிலாளர்கள் கொத்து கொத்தாகப் பலியாகி வருவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் இதேபோன்ற ஒரு விபத்தில் 200 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
English Summary
Over 200 Miners Buried in DRCs Rubaya Coltan Mine Rebels Allegedly Hide Death Toll