1000 இந்திய மாணவர்களுக்காக ஈரான் செய்த செயல்: போருக்கு மத்தியிலும் வான்வெளி திறப்பு..!
Iran opens airspace for 1000 Indian students to leave
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. தற்போது அது தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதல் காரணமாக ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்திய மாணவர்கள் 1000 பேர் வெளியேறுவதற்காக வான் வெளியை ஈரான் அரசு திறந்துள்ளது. இஸ்ரேல் மீதான போர் எதிரொலியாக ஈரான் தமது வான்வெளியை மூடி இருந்தது. தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வான்வெளியை திறந்துள்ளது.
'ஆபரேஷன் சிந்து' மூலம் முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஈரானில் இருந்து சாலை மார்க்கமாக அர்மேனியா தலைநகர் எரவான் எல்லை அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டில்லி அழைத்து வரப்பட்டனர்.

தற்போது, ஈரானில் இருந்து அடுத்த கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் வெளியேற வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டுள்ளது. ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸ் 3 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
குறித்த மாணவர்கள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத நகரமான மஸ்சாத் வழியாக பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் விமானத்தின் மூலம் மாணவர்களில் ஒரு பகுதியினர் தலைநகர் டில்லி அழைத்து வரப்படவுள்ளதாகவும், எஞ்சியவர்களும் பகுதி, பகுதியாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Iran opens airspace for 1000 Indian students to leave