ட்விட்டரில் இருந்து எலான் மஸ்க் விலக பயனாளர்கள் வலியுறுத்தல்.!
elon musk step down in twitter ceo post users vote
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அதிலிருந்து அவர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை நடத்தி வருகிறார். இதனால் அவர் சர்வதேச அளவில் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் தன்னை குறித்து பத்திரிகைகளில் எழுதி வந்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கிய அவர் கடும் எதிர்ப்புக்கு பின்பு அந்த கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து நான் விலக வேண்டுமா? என்று எலான் மஸ்க் டுவிட்டரில் கருத்து கணிப்பு ஒன்றை முன் வைத்துள்ளார். இதற்காக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
"நீங்கள் அளிக்கும் வாக்கை மிகக் கவனமாக அளியுங்கள். ஏனென்றால் உங்கள் விருப்பம் தான் நிச்சயமாக நிறைவேறும்" என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து கணிப்பு கேள்வியில் சுமார் 1.70 கோடிக்கு அதிகமான பயனாளர்கள் வாக்களித்தனர்.
அதில் 57.5 சதவீதம் பேர் டுவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆனால், இந்த கருத்துக்கணிப்பு முடிவு குறித்து இதுவரை எலான் மஸ்க் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வெளியாகவில்லை.
English Summary
elon musk step down in twitter ceo post users vote