பயங்கர நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 25-க்கும் மேற்பட்ட லாரிகள்..! 3 பேர் பலி
25 lorries buried and 3 died in landslide in pakistan
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்துங்வாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள டோர்காம் எல்லைப் பகுதியில் கனமழை காரணமாக நேற்று அதிகாலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் டோர்காம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 25க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் மண்ணில் புதைந்தன. இதையடுத்து தகவலறிந்து விரைந்த 60க்கும் மேற்பட்ட மீட்பு படையினர், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இந்த நிலச்சரிவில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கனரக வாகனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்து வருவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானியர்களுக்கும், பாகிஸ்தானிற்கும் ஏற்பட்ட மோதலினால் டோர்காம் எல்லைப் பகுதி மூடப்பட்ட பிறகு தற்போது நிலச்சரிவினால் மீண்டும் டோர்காம் பகுதி மூடப்பட்டுள்ளது.
English Summary
25 lorries buried and 3 died in landslide in pakistan