சென்னையில் சேர்ந்து வாழ்ந்த காதலி… ஊரில் வேறொருவரை திருமணம் செய்ய முயன்ற வாலிபர்! அதிர்ச்சியில் முடிந்த சம்பவம்...!
young man tried marry his girlfriend Chennai someone town incident ended shock
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண், சென்னையில் அழகு நிலையம் நடத்தி வருபவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்லல் அருகே வெற்றியூரில் நடைபெற்ற ஒரு விழாவில், அப்பகுதியை சேர்ந்த இளைஞருடன் முதன்முதலில் அறிமுகமானார்.
அந்த நட்பு சில மாதங்களில் காதலாக மாறி, பின்னர் இருவரும் சென்னையில் வாடகை வீட்டில் இணைந்து வாழத் தொடங்கினர்.இந்நிலையில், அந்த இளைஞருக்கு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை கிடைத்தது. இதே சமயம் அவருக்கான திருமணத்தை அவரது குடும்பத்தினர் ஊரில் ஏற்பாடு செய்தனர்.

இதற்காக ஊருக்கு சென்ற இளைஞர், “பெற்றோரிடம் பேசிவிட்டு சீக்கிரம் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று காதலியிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பவில்லை.பின்னர், அந்த இளைஞர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் குடும்பத்தினர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் இளம்பெண்ணிடம் வந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக விராலிமலைக்கு சென்று, திருமணப் பெண் வீட்டாரிடம் நேரடியாக தனது காதல் குறித்து தெரிவித்து, திருமணத்தை நிறுத்தி வைத்தார்.இந்த விவகாரம் பெரிதாக பரவத் தொடங்கிய நிலையில், காதலனை நேரில் சந்திக்க முயன்ற இளம்பெண்ணுக்கு, ஒரு அரசியல் பிரமுகர் தலையீட்டினால் அந்த இளைஞரை ரகசிய இடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக தெரிய வந்தது.
அவரைச் சந்திக்க முடியாததால் மன அழுத்தம் அதிகரித்த இளம்பெண், தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்ட போலீசார், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில், தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டதால், போலீசார் இருதரப்பு குடும்பங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
English Summary
young man tried marry his girlfriend Chennai someone town incident ended shock