வேலூர் அருகே காட்டுத்தீ கொடூரம்: 250 அடி கோழிப் பண்ணை சாம்பல்… ரூ.12 லட்சம் முதலீடு கணநேரத்தில் கருகியது!
Wildfire near Vellore 250 feet poultry farm reduced ashes12 lakh investment burnt instant
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகேயுள்ள மராட்டிப்பாளையத்தைச் சேர்ந்த 55 வயதான ரேவதி, தனது விவசாய நிலத்தில் மாட்டு தீவனப் பயிர்களுடன் சேர்த்து 250 அடி நீளத்தில் தகர கூரையுடன் கூடிய கோழிப் பண்ணையை அமைத்து வளர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கோழி வளர்ப்பை தொடங்குவதற்காக சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வாங்கி பண்ணையில் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பண்ணைக்கு அருகில் பரவமழை காப்புக்காடு அமைந்துள்ளது. அங்கு மர்ம நபர்கள் வைத்த தீ காட்டில் வேகமாக பரவி எரிந்ததாக கூறப்படுகிறது. அந்த காட்டுத்தீயிலிருந்து பறந்த தீப்பொறிகள் கோழிப் பண்ணை மீது விழுந்ததால், கணநேரத்தில் தீ மளமளவென பரவி பண்ணை முழுவதையும் சூழ்ந்ததுடன், அருகிலிருந்த மாட்டு தீவனப் பயிர்களுக்கும் பரவியது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தண்ணீர் பீச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், கோழிப் பண்ணை முழுவதும் எரிந்து, ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது.சம்பவத்தை தொடர்ந்து வருவாய் துறையினரும் வேப்பங்குப்பம் போலீசாரும் நேரில் ஆய்வு செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தால் பெரும் இழப்பை சந்தித்துள்ள ரேவதிக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wildfire near Vellore 250 feet poultry farm reduced ashes12 lakh investment burnt instant