திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் களமிறங்குவது தவெகவா அல்லது காங்கிரஸா..? அமைச்சர் ராஜேஷ்குமார் பதில்..!
Minister Rajeshkumar responds to whether it will be TVK or the Congress contesting the Trichy East by election
நடந்து முடிந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தவெக தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய், போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.
இதனால், திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நான்கு தொகுதிகள் என மொத்தம் தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகள் காலியாகவுள்ளன.

விரைவில் இந்த ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கில் ஆளும் கட்சி சார்பில் தவெகவே நேரடியாக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிகளின் வசம் ஒப்படைக்கப்படுமா எனும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருச்சி கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''முதல்வர் விஜய் நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் திருச்சி கிழக்கில் தவெகதான் போட்டியிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Rajeshkumar responds to whether it will be TVK or the Congress contesting the Trichy East by election