வீரவசனம் பேசுன முதல்வர் விஜய் எங்கே'...? தவெக நிர்வாகிகளை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்...! - தமிழக அரசியலில் வெடித்த புதிய புயல்!
Where Chief Minister Vijay who spoke bravely TTV Dhinakaran who roasted Tvk administrators new storm erupted Tamil Nadu politics
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் பெண்களை குறிவைத்து அரங்கேறியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடன் உதவி பெற்றுத்தருவதாக நம்பிக்கை ஏற்படுத்தி, 50-க்கும் மேற்பட்ட பெண்களை வலையில் சிக்கவைத்து, அவர்களின் தனியுரிமையை சீரழிக்கும் வகையில் ஆபாச காணொளிகள் பதிவு செய்து மிரட்டியதுடன், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் சமூகத்தை தலைகுனிய வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது ஏற்கனவே குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பல்வேறு புகார்கள் மற்றும் வழக்குகள் இருந்தபோதிலும், அவற்றில் உரிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாதது மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்ப கட்டத்திலேயே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய கொடூர குற்றச்செயல்கள் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சிறுமி மீதான பாலியல் அத்துமீறல், ஆலந்தூரில் தனியாக வாழ்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் உள்ளிட்ட தொடர்ச்சியான குற்றச்செயல்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பே அரசின் முதன்மை இலக்கு என அறிவித்த ஆட்சி, தனது கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளை தடுக்கவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை மதிக்கும் சூழலை உருவாக்கவும் தவறியிருப்பது கவலைக்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கல்வி நிலையங்கள், பணியிடங்கள், பொதுவெளிகள் மற்றும் பயண இடங்கள் என பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதாக உறுதியளித்த அரசு, தற்போது எழுந்துள்ள இந்த விவகாரத்தில் மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, இந்த குற்றச்செயல்களின் பின்னணியில் செயல்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனை, மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வு ஆதரவுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு என்பது அரசியல் விவாதப் பொருள் அல்ல; அது சமூகத்தின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து, இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Where Chief Minister Vijay who spoke bravely TTV Dhinakaran who roasted Tvk administrators new storm erupted Tamil Nadu politics