மணலி செட்டிமேடு பகுதியில் வெள்ள நிவாரண மையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்..? அதிகாரிகள் கூறுவது என்ன.?
When will the flood relief center in the Manali Chettimedu area come into use
சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 17-வது வார்டு செட்டிமேடு பெருமாள்கோயில் தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு மழைக்காலத்தின்போது மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்து பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு திமுக முன்னாள் கவுன்சிலர் கவிதாநாராயணன் அவர்களினால், வார்டு மேம்பாட்டு நிதி 15 லட்சம் செலவில் பல்நோக்கு மையம் கட்டப்பட்டது.
ஆனால் பல்நோக்கு மையம் இடவசதி குறைவாக இருப்பதாக கூறி, அதனை விரிவுபடுத்தவேண்டும் என்று முன்னாள் ஊராட்சி தலைவரும் திமுக மாதவரம் வடக்கு பகுதி செயலாளருமான புழல் நாராயணன் கடந்தாண்டு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில், ரூ1.80 கோடி செலவில் பழைய பல்நோக்கு மையத்தை இணைத்து புதியதாக வெள்ள நிவாரண மையம் மற்றும் சமுதாய கூடம் கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன. அதன்படி, முதல்தளத்துடன் சமையல் அறை, உணவருந்தும் கூடம், நவீன கழிவறை குளிர்சாதன வசதி என பல்வேறு அம்சங்களுடன் பணிகள் நடைபெற்று கடந்த 02 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மணலி மண்டல உதவி ஆணையர் அரவிந்தன், செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் வெள்ள நிவாரண மையத்தை ஆய்வு செய்தனர். தற்போது பருவமழை துவங்க உள்ளதால் வெள்ள நிவாரண மற்றும் சமுதாய கூடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு திறந்து விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
English Summary
When will the flood relief center in the Manali Chettimedu area come into use